- ஆன் லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவதாக விளம்பரம் வெளியிடும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது
- சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய பார் கவுன்சில் விளக்கம்
- இணையதளங்களில் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்து அறிக்கை அளிக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவு
ஆன் லைனில் விளம்பரம் வெளியிடும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு .
ஆன் லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவதாக விளம்பரம் வெளியிடும் வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக, இந்திய பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் அன்றாட தேவைகளை ஆன்லைன் மூலமாக வழங்கிவரும் சுலேகா, க்விக்கர், ஜஸ்ட் டயல் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள், வழக்கறிஞர் சேவையையும் வழங்கி வருவதாகவும், அதற்கு தடை விதித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும், வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி விக்னேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலாம அமர்வு, இந்திய பார் கவுன்சில் விதிகளின்படி, வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களை விளம்பரபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவது தொடர்பாக, விளம்பரங்கள் வெளியிடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும் நான்கு வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய பார் கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இணையதள நிறுவனங்கள் தரப்பில், இந்த விளம்பரங்கள் நீக்கப்பட்டு விட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதா என இணையதளங்களில் சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.