நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதில், 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் பற்றி சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை த்ரிஷா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் பார்க்கும் பட்சத்தில் பெரும் நேகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்து யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில சர்ச்சையான கருத்துகளை பகிர்ந்தார்.

இதில் நடிகை திரிஷா குறித்து பேசிய கருத்துகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இனிமேல் சட்டரீதியாக தான் எல்லாவற்றையும் சொல்ல போகிறேன்” என்று கொந்தளிப்புடன் பதிவு போட்டிருந்தார்.

இதனை அடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்ட ஏ.வி.ராஜூ, அதில் தான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டதாகவும், திரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜூவுக்கு திரிஷாவின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் திரிஷா குறித்து இணையத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 4 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், திரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களிலும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு, மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும், நடிகை திரிஷா அந்த நோட்டீஸில் எச்சரித்துள்ளார். இந்த நோட்டீசை தனது X தளத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.