சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானவர் பாலா. இவ்வாறு ஒரு சில தமிழ் படங்களில் தலைகாட்டி உள்ளார். சமீபத்தில் இவர் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் தனது சொந்த செலவில் சில அறக்கட்டளைகளுக்கு இலவச ஆம்புலன்ஸ்களை வழங்கி தந்தார். எனக்கு கார் வாங்குவதில் ஆர்வம் இல்லை. இறந்தவர்களின் இறுதி பயணம் சிக்கல் இல்லாமல் அமைய வேண்டும் என்று அப்போது குறிப்பிட்டார். தற்போது மீண்டும் ஒரு மனிதாபிமான செயலை பாலா சத்தம் இல்லாமல் அரங்கேற்றுள்ளார். சென்னை, அனகாபுத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பாலா பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் 1000 உதவித்தொகையை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் 230 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 1000 என்ற வகையில் ரூபாய் 2.3 லட்சத்தை அவர் வழங்கினார். உதவி தொகை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் நன்றி கூறியதை கூட கேட்காமல் அங்கிருந்து பாலா புறப்பட்டு சென்றார். இது குறித்து அவர் கூறுகையில்; பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த நான் முதலில் காலடி எடுத்து வைத்தது அனகாபுத்தூரில் தான். மழையால் பாதிக்கப்பட்ட இந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய நினைத்தேன். என்னிடமிருந்த பணத்தை கொடுத்துள்ளேன். நிறைய செய்ய ஆசை தான். ஆனால் என்னிடம் இருந்தது இவ்வளவு தான். காசு சேர்ந்தால் இன்னும் நிறைய செய்வேன் என்றார். இதுபோல சின்னத்திரை நகைச்சுவை நடிகை அறந்தாங்கி நிஷாவும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, கொசுவத்தி, மெழுகுவர்த்தி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் இருக்கும் வீடுகளை தேடி சென்று சானிடைசர், நாப்கின் மற்றும் டயப்பர்களை போதுமான அளவிலும் வழங்கி வருகிறார். கடந்த மூன்று நாட்களாக அவர் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து கேட்டபோது செய்யும் உதவிகளை வெளியே சொல்ல கூடாது எனக் கூறி முடித்துக் கொண்டார். பெரிய பிரபலங்கள் உதவிக்கரம் நீட்டாத நிலையில், பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து சின்னத்திரையில் ஜொலிக்கும் சாதாரண நடிகர்கள் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் தன்னால் இயன்ற உதவியை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்வது கவனம் ஈர்த்துள்ளது. அவர்களே பொதுமக்கள் மனதார பாராட்டியும், வாழ்த்தியும் வருகிறார்கள்.