தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் குறிப்பிட்ட இடைவேளையில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், சில ஆண்டுகளாக அந்த நிகழ்வு நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் வெற்றி சமயத்தில் ரசிகர்களை சந்திக்க அவர் திட்டமிட்டார். ஆனால் அப்போது கொரோனா பரவல் காரணமாக அந்த சந்திப்பு ரத்தானது.

இந்த நிலையில் தற்போது சிலம்பரசன் ரசிகர் மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகளை மட்டும் நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்ள திட்டமிட்டார்.
அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிலம்பரசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அம்மன்ற நிர்வாகிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சென்னை வந்து நடிகர் சிலம்பரசன் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் அவர்களுக்கு மதிய விருந்து அளித்து உபசரித்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.