திருநெல்வேலி மாவட்டம், அருகே நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு, நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6 ஆம் தேதி வெளியானது. அதில் கொடூர தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார்.
இந்த தேர்வில் அவர், தமிழ் – 71, ஆங்கிலம் – 93, பொருளியல் – 42, வணிகவியல் – 84, கணக்குப்பதிவியில் – 85, கணினி அறிவியல் – 94 என மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் பலரும் சின்னதுரைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நடிகர் தாடி பாலாஜி நெல்லைக்கு நேரில் சென்று மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். மாணவன் சின்னத்துரையை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் சின்னதுரைக்கு புதிய ஆடையை பரிசாக வழங்கி எந்த உதவி வேண்டுமானாலும் கேள் செய்து கொடுக்கிறேன் என கூறி விட்டு சென்றார். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.