கோவை திமுக அலுவலகத்தில் பரமேஸ்வரன் என்ற திமுக போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை, நீலகிரி மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அத்த சங்கத்தின் பொதுசெயலாளர் சண்முகம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் இருக்கக்கூடிய போக்குவரத்து ஊழியர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம், மின்சார ஊழியர் சங்கம், ஆட்டோ சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொ.மு.ச நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் தொமுச போக்குவரத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. அங்கிருந்த திமுக தொண்டர்கள் உடனடியாக அவரை மீட்டனர்.

தொமுச நிர்வாகிகள் சிலர் சங்க பிரச்சினை காரணமாக தனக்கு பணி மாறுதல் செய்து இருப்பதாகவும், தொழிற்சங்கத்திற்குள் இருக்கக்கூடிய பிரச்சனை காரணமாகவே அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தன்னை வேறு இடத்துக்கு மாறுதல் செய்ய வைத்திருப்பதாகவும், திமுக நிர்வாகிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காததால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

தொமுச போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரமேஸ்வரன் அப்போது தெரிவித்துள்ளார். இந்த தற்கொலை முயற்சி சம்பவம் காரணமாக திமுக அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.