கோவை மாவட்டம், ஆலந்துறையில் 13 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பவம் குறித்து தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத 11 ஆசிரியர்கள் மீதும், இந்த போக்சோ வழக்கினை அலட்சியமாக கையாண்ட நான்கு காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், ஆலந்துறையில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மாணவி குடுபத்துடன் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து புகார் மனுவை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்கள்;

13 வயது பள்ளி மாணவி பாலியல் சம்பவம் குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 11 ஆசிரியர்களிடம், பாதிக்கபட்ட மாணவி புகார் தெரிவித்தும், ஆசிரியர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் இதை வெளியில் பேசக்கூடாது என குழந்தையை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டு இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மாணவி குடும்பத்தினரை சமாதானப்படுத்தும் விதத்தில் ஆசிரியர்கள் செயல்பட்டு இருப்பதாகவும், புகாரில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை மேற்கொள்ளாமல், போக்சோ விதிமுறைகளை மீறி, பெண் காவலர்கள் குழந்தையை காவல்துறை வாகனத்தில், காவல் நிலையம் அழைத்து சென்று பல மணி நேரம் வைத்து, காவலர் சீருடையில் விசாரணை மேற்கொண்டு இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். போக்சோ சட்ட விதிகளுக்கு முரணாக செயல்பட்ட காவல்துறையினர் நான்கு பேர் மீதும், சம்பவம் குறித்து தெரிந்தும் அதை மறைக்க முயன்ற ஆசிரியர்கள் 11 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். உரிய நடவடிக்கைகள் இல்லையெனில் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.