விருதாச்சலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் பற்பசை என நினைத்து எலி மருந்தை சாப்பிட்டதால், கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
கடலூர் மாவட்டம், அடுத்த விருதாச்சலம் அருகே கொட்டாரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது குழந்தைகள் அனுஷ்கா (3) மற்றும் பாலமித்திரன் (2). மணிகண்டனின் தங்கை அறிவழகியின் மகள்கள் லாவண்யா (5), ராஷ்மிதா (2).

இந்த 4 குழந்தைகளும் நேற்று வீட்டில் இருந்த எலி மருந்தை, பற்பசை என நினைத்து வாயில் வைத்து விளையாடி உள்ளனர். நல்வாய்ப்பாக அதை உடனடியாக பார்த்த குடும்பத்தினர், அவர்களை அருகில் உள்ள விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் சென்றனர்.
இதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது குழந்தைகள் நால்வரும் நல்ல நிலையில் இருந்தாலும் கூட தொடர்ந்து மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் மற்றும் ஆலடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.