தேசியப் பறவைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா? ஒரே இடத்தில் 33 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி. கோவை மாவட்டம் சூலூர் கிராமம் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதியில் அருகிலுள்ள தோட்டங்களில் 33 தேசிய பறவை மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் வதம்பச்சேரி கிராம பஞ்சாயத்தில் அருகே உள்ள தோட்டங்களில் 33 தேசிய பறவை மயில்கள் இறந்து கிடந்தன.வதம்பச்சேரி காந்தி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 17 மயில்களும் ,ராமசாமி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான விவசாய காலி இடத்தில் 12 மயில்களும், கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 2 மயில்களும் ,கந்தசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் 2 மயில்கள் என 33 தேசிய பறவை மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.

அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, விரைவில் அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுல்தான்பேட்டை போலீசார் சென்று பார்வையிட்டு மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.பின்னர் தகவல் அறிந்து வந்த வனதுறையினர் வனலுவலர் சந்தியா , சந்துரு மற்றும் அரவிந்த் ஆகியோர் உடனடியாக மயில்கள் இறந்து கிடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
வதம்பச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் என்பவரும், வாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் லோகநாதன் என்பவர் ஆகியோர் முன்னிலையில் இறந்து போன 33 தெசிய பறவை மயில்களின் உடல்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அவ்ஊர் மக்கள் எடுத்துச் சென்றனர். மேலும் கோபால்சாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது.

பயிரிடப்பட்ட மக்காச்சோள விதைகளின் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த வனத்துறையினர் சேகரித்து சென்றனர். மயில்களின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே, மயில்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும்.