ஒசூர் அருகே மளிகை கடைக்காரர் கொலை வழக்கில் மூன்று இளைஞர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளர், சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த பேகேப்பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை ஓட்டலுக்குள்ளாகவே, மளிகை கடைக்காரர் திம்மராஜ் வயது (40) என்பவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலைக்கு பொறுப்பேற்று நேற்று இராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒசூரை சேர்ந்த கிரண் வயது (22), மூர்த்தி வயது (20), ராஜ்குமார் வயது (22) ஆகியோர் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொலைக்கு காரணமாக சரணடைந்த இளைஞர்கள் கூறியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. ஒசூர் அடுத்த பேகேப்பள்ளியை சேர்ந்த கிரண் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த சசிகுமார் என்பவர் வீட்டினை காலி செய்த போது முன்பணத்தில் 1500 ரூபாயை கிரணின் அம்மா நாகரத்தினா (அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மகளரணி செயலாளர்) பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சசிக்குமார் பலமுறை நாகரத்தினாவிடம் நேரில் சென்று தனது பணத்தை திருப்பி கேட்ட போதும் தராததால் கடந்த 11.10.2023 அன்று சசிக்குமார் – நாகரத்தினா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி சசிக்குமார் அரிவாளால் வெட்டியதில் தலையில் நாகரத்தினாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்ததாகவும் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்கள் (கொலையானவர்) திம்மராஜ் நாகரத்தினாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நாகரத்தினாவை சசிக்குமார் வெட்டியதை நேரில் பார்த்ததாக சாட்சி அளிக்குமாறு திம்மராஜிற்கு கூறி உள்ளனர். ஆனால் திம்மராஜ், நீதிமன்றத்தில் வெட்டியதை நான் பார்க்கவில்லை என உண்மையை சாட்சியாக கூறியதால் ஆத்திரமடைந்த நாகரத்தினா அவரது கணவர் முனிராஜ் மற்றும் அவரது மகன் கிரண் ஆகியோர் திம்மராஜை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

இதற்கு கிரண் தனது நண்பர்களுடன் திம்மராஜை கொலை செய்ய கடந்த சில தினங்களாக திட்டமிட்டு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி வைத்து சிறுவர்கள் மற்றும் பெண் மூலம் திம்மராஜை நோட்டமிட்டு வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கிரண் தனது நண்பர்களான மூர்த்தி வயது (20), ராஜ்குமார் வயது (22) ஆகியோருடன் சென்று திம்மராஜை நோட்டமிட்டு குத்திக் கொலை செய்ததாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து ஒசூர் சிப்காட் போலீசார் அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளர் நாகரத்தினா, அவரது கணவர் முனிராஜ் வயது (45), ஸ்வேதா வயது (27), ஸ்ரீதர் வயது (27), ராகேஷ் வயது (27), முரளி வயது (28) மற்றும் 3 சிறுவர்கள் 3 போ் என 9 பேரை கைது செய்துள்ளனர்.