பைபர் படகின் வலையை அறுத்து நடுக்கடலில் அண்ணன், தம்பியை கொலை செய்த விசைப்படகு மீனவர்கள். “விட்டுவிடுங்கள் என கெஞ்சியும்” கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக உயிர்ப்பிழைத்த மீனவர் கண்ணீர் பேட்டி. படகின் உரிமையாளர் தலைமறைவு 7 பேர் கைது.
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் ஆத்மநாதன், சிவநேசசெல்வம், காலத்திநாதன் ஆகிய மூவரும் தங்களுக்கு சொந்தமான பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று மாலை 5 மணியளவில் மீன்பிடிக்க சென்ற இவர்கள் கரையில் இருந்து 2 நாட்டில்கள் தொலைவில் நடுக்கடலில் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே தொழிலுக்கு சென்ற கோகிலா என்ற பெயருடைய விசைப்படகு இவர்களது வலைகளை அறுத்து சென்றதாகவும், அவர்களை எதிர்த்து கேட்டதாகவும், இதனால் விசைப்படகு மீனவர்கள் பைபர் படகின் மீது மோதியாகவும் கூறப்படுகிறது.

அப்போது இருதரப்பு மீனவர்கள் மத்தியில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விசைப்படகு மீனவர்கள் பைபர் படகின் மீது மோதி மீன்பிடி உபகரணங்கள் கொண்டு அவர்கள் மீது கடுமையாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலில் படகு கவிழ்ந்து மூன்று மீனவர்களும் கடலில் குதித்து தப்பிக்க முயன்ற போதும் விசைப்படகு மீனவர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டதில் சிவநேசசெல்வம், காலத்திநாதன் ஆகிய இருவரும் கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

தன்கண்முன்னே அண்ணன் தம்பிகள் உயிர்விடுவதை பார்த்த ஆத்மநாதன் படுகாயங்களுடன் கடலில் மூழ்கி அங்கிருந்து தப்பி சக மீனவர்களின் உதவியோடு நாகை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் இதனை அறிந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் நடுக்கடலில் உயிரிழந்து மிதந்த சிவநேசசெல்வம் சடலத்தை மீட்ட நிலையில், காலத்திநாதன் சடலகை கடலோர காவல்குழும போலீசாரின் உதவியோடு தேடி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் அக்கரைப் பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் மீனவ கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கைமுறிவு மற்றும் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் மீனவரை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தங்களை விட்டுவிடுங்கள் என கெஞ்சியபோதும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பைபர் படகு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் உயிர்ப்பிழைத்த மீனவர் ஆத்மநாதன் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் படகை இயக்கிய அதன் உரிமையாளர் பாலகுமார் தலைமறைவாகிய நிலையில், பைபர் படகு மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீதர் , காளியப்பன், பாலகிருஷ்ணன், வேலாயுதம், மாரியப்பன், கண்ணன், தண்டபாணி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகையில் நடுக்கடலில் இரண்டு மீனவர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.