தந்து சொந்த தாத்தா பாட்டிக்கு , குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்த பேரனை , விழுப்புரம் தாலுகா போலீசார் இன்று கோயம்பத்தூரில் கைது செய்துள்ளனர் .
விழுப்புரம் அருகே உள்ள பில்லூர் கிராமம் திரவுபதியம்மன் நடுத் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் கழுவு (65). முடி திருத்தும் தொழிலாளி. இவரது மனைவி மணி (60). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். கழுவு இளைய மகன் முருகன் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரில் வசித்து வருகிறார். இவரது மகன் அருள் சக்தி (20) அடிக்கடி பில்லூர் சென்று தனது தாத்தா-பாட்டியை பார்த்து வருவது வழக்கம்.
அதே போல் நேற்று மாலையும் அருள் சக்தி தனது தாத்தா-பாட்டியை பார்க்க வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வெகுநேரமாக கழுவு வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கழுவு அவரது மனைவி மணி ஆகியோர் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பிணமாக கிடந்த கணவன்-மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்திய போது கழுவு பேரன் அருள் சக்தி தான் நேற்று மாலை வந்து சென்றதாக தெரிவித்தனர்.
அவரது செல்போனில் போலீசார் தொடர்பு கொண்ட போது சுவிட் ஆப் என வந்தது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தாத்தா-பாட்டியை பேரன் அருள் சக்தி உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது தெரிய வந்தது. மேலும் அவர் கோயம்பத்தூரில் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து தனி படை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
உணவில் விஷம் கலந்து கொடுத்து தாத்தா-பாட்டியை பேரன் கொன்ற சம்பவம் பில்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.