அரசு காவல் வாகனத்திற்கு தனது சொந்த செலவில் டிரைவர் அமா்த்தியது, விபத்து இழப்பீடுகளில், பெருமளவு லஞ்சம் பெற்றது உள்ளிட்ட குற்றசாட்டுகள் நிரூபணமானதை அடுத்து பள்ளிக்கரணை பெண் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் பணிநீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராணி. இவர் தனக்கு காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்ட போலீஸ் வாகனத்தை (ஜீப்) ஓட்டுவதற்கு, தனியாக தனது சொந்த செலவில் ஓட்டுநர் ஒருவரை நியமித்ததுடன் இவரது சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த செல்லும் போது அந்த தனியார் ஓட்டுநரை அழைத்துக்கொண்டு, அலுவலக ஜீப்பில் செல்வதாக குற்றசாட்டுக்கள் எழுந்தது.
மேலும் விபத்து நடந்த இடத்திற்கு, அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் சிலரை வரவழைத்து பின்னர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துவிட்டு, அவருக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் மூலம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு, பாதிக்கப்பட்ட பொதுமக்களை வற்புறுத்தி வந்துள்ளார். அதனை ஏற்க மறுக்கும் பொதுமக்களை, ஆய்வாளா் என்ற முறையில், அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இழப்பீடாக கிடைக்கும் பணத்தில், ஒரு பகுதியை தனுக்கு லஞ்சமாக அளிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி பணம் பெற்று வந்துள்ளார் .

இவரது அராஜகத்தை பொறுக்க முடியாத பொதுமக்கள் சிலர் தாம்பரம் சரக காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தனர். விசாரணையில் ஆய்வாளர் ராணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்ததை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர் விசாரணையில் போக்குவரத்து ஆய்வாளர் ராணி மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ராணியை செவ்வாய்க்கிழமை அன்று பணிநீக்கம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.