- சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘சென்னை, அமைந்தகரை, மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் 01.11.2024 அன்று கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி இறந்து போனது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் இறந்த போனவர் 15 வயது சிறுமி என்பதும் அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் என்பதும், சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 2023-ம் ஆண்டு முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் இறந்து போன சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
எனவே மேற்கண்ட வீட்டில் வசித்த முகமது நிஷாத் மற்றும் அவரது மனைவி நிவேதா (எ) நாசியா, நண்பர்களான லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, அவர்களது வீட்டு வேலைக்கார பெண்மணி மகேஸ்வரி, முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 31.10.2024 அன்று சிறுமியை தாக்கியதில் அவர் இறந்துள்ளது தெரியவந்தது.
அதன் பேரில் மேற்கண்ட சந்தேக மரணம் வழக்கானது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு எதிரிகள் நிவேதா (எ) நாசியா(30), அவரது கணவர் முகமது நிஷாத்(36), லோகேஷ்(26), அவரது மனைவி ஜெயசக்தி(24), கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(40) மற்றும் முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம்(39) ஆகியோர் 02.11.2024 அன்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் மீது தனது கணவரின் பார்வை திரும்பியதாக சந்தேகப்பட்டு கொடூரமாக சித்தரவதை செய்ததாக கைதான நாசியா வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிறுமியின் மீது ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தி அவரை மற்றவர்களும் பெல்ட் மற்றும் மூங்கில் கம்பால் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/actress-vijayalakshmi-released-a-video-criticizing-seeman-in-support-of-dmk-party-and-vijay/
அயன்பாக்ஸ், சிகரெட்டால் சூடு வைத்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வருகிற 16-11-2024 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.