கோடை காலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்து வருகிறது.வெயிலின் தாக்கம் மக்கள் வாழும் நிலப்பரப்பில் இருப்பதை விட காட்டுப்பகுதியில் அதன் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கிறது.அந்த வகையில் கோவை பகுதியில் நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ, இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோயமுத்தூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை வனச்சரகத்திலுள்ள நாதே கவுண்டன்புதூர் அருகே உள்ள மலையில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
போலாம்பட்டி பிளாக் II அடர்வனப்பகுதியிலுள்ள காய்ந்த புற்கள் நிறைந்த 50 ஹெக்டேர் பரப்பளவில் தரிசு பாறையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 40 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் கடந்த இராண்டு நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.
இது பற்றி மாவட்ட வன அலுவலர் கூறுகையில்
தற்போது காட்டுத்தீ கீழே பரவி வருகிறது. மலைப்பகுதி செங்குத்தானதாக இருப்பதால் பாறைகள் நிறைந்துள்ளது. இதனால் அப்பகுதியை நெருங்க முடியாத சூழல் உள்ளது.
தற்போது தீயணைக்கும் குழுவினர் கீழ்மலை மற்றும் மேல்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாறைப் பகுதியானது சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பாகும், இதில் சுமார் 50 ஹெக்டேர் பரப்பளவு ஏற்கனவே எரிந்துள்ளது.

பாறைகள் நிறைந்த பகுதிக்கு செல்ல முடியாததால், பாறைகள் நிறைந்த பகுதியில் தீ பரவுவதை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். காட்டுத்தீயை ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து கட்டுப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாறைகளில் எரிந்த காய்ந்த புற்கள், நெருப்புப் பந்துகள் போல் மலைப் பக்கமாக விழுந்து பரவுவதை அதிகரிக்கும், ஆனாலும் தீயை அணைக்கும் பணி முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.மேலும் இந்த தீ சம்பவத்தால் உயிரிழந்த வன விலங்குகளை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்று கூரினார்.