கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைத்துக் கொள்ள அரசு அறிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து இரவு பகலாக அங்கு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. மணல் குவாரி அமைத்து அளவிற்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும் மற்றும் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். பல்வேறு விதமான போராட்டங்களையும் நடத்தினர்.

இந்த நிலையில்11 ஹெக்டேரில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் ஏனாதிமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் கே.ஹேமராஜன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
மணல் குவாரியை மூடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை. மணல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
2 பொக்லைன்கள் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதும், ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மணல் அள்ளுவதும் புகைப்பட ஆதாரங்களிலிருந்து தெரிகிறது என நீதிபதி எம்.தண்டபாணி கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து 4 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.