வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், கானை, வளவனூர், பெரும்பாக்கம், தொகைபாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர் அகரம், கப்பியாம்புலியூர், குச்சிபாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து பரவலாக மழை பெய்தது. மீண்டும் நள்ளிரவு 12 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. அடுத்து சில நிமிடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது.இந்த மழை இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் அதிகாலை ஐந்து மணி வரை விட்டுவிட்டு தூரி கொண்டே இருந்தது.

இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் பட்டனர். பலத்த மழையால் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தேங்கி நின்ற மழை நீரை நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் வெளியேற்றினர் இதேபோல் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
மேலும் பலத்த மழையின் காரணமாக சில கிராமப்புறங்களில் நள்ளிரவில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது இதே போல் விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மரக்காணம், வானூர், கோட்டகுப்பம், உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த மழை பெய்தது, மாவட்டத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 67 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து வரத் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: மரக்காணம் 67, வானூர் 55, வளத்தி 37, திண்டிவனம் 32, முண்டியம்பாக்கம் 30.50, செஞ்சி 25, அவலூர்பேட்டை 19.60, விழுப்புரம் 17, கெடார் 16, வல்லம் 16, கஞ்சனூர் 15, செம்மேடு 14, புள்ளி 50, கோலியனூர் 12, வளவனூர் 12, நேமூர் 12, சூரப்பட்டு 12, அனந்தபுரம் 11, மனம் பூண்டி 9, முகையூர் 9, அரசூர் 3.