விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆய்வு மேற்கொள்ள வந்த முதலமைச்சரின் வருகையை ஒட்டி புதிதாக சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த சிறு மழை காரணமாக அந்த சாலைகள் முற்றிலுமாக சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்து வருவது கவலை அளிப்பதாக தெரிவிக்கின்றனர் பொதுமக்கள்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நூலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், நீச்சல் குளம், தேர்தல் அலுவலகம், ஆட்சியர் முகாம் அலுவலகம், விருந்தினர் மாளிகை என பல அலுவலகங்களை உள்ளடக்கி உள்ளது ஆட்சியில் வளாகம். இந்த ஆட்சியர் வளாகத்தில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் விழுப்புரத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆட்சியர் வளாகத்தில் உள்ள முக்கிய சாலைகள் தார் சாலைகளாக போடப்பட்டன. ஒரு சில வாரங்களிலேயே தற்போது பெய்த சிறு மழையிலேயே சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக வாகன ஓட்டிகள் கருதுகின்றனர். பொதுமக்களும் தரம் இல்லாத இந்த தார் சாலையை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரம் இல்லாத தார் சாலையா? அப்படியானால் மாவட்டம் முழுவதும் சாலைகள் எப்படி இருக்கும் என்கிற கேள்வி எங்களுக்கு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.