72 குண்டுகள் முழங்க
தமிழ் திரைப்பட நடிகரும்,தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் விஜயகாந்தின் குடும்பத்தினர், நெருங்கிய நட்பு வட்டம், முதல்வர் ஸ்டாலின், இந்நாள் – முன்னாள் அமைச்சர்கள், சில திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் தங்கள் கேப்டனுக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

முன்னதாக தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து விஜயகாந்தின் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.
சந்தனப் பேழை
சந்தனப்பேழையில் ‘கேப்டன்’ உடல்: தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட விஜயகாந்தின் உடல் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது. இதற்காக 50 கிலோ எடை கொண்ட பிரத்யேக சந்தனப் பேழை தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையின் ஒருபுறத்தில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்கிற வாசகமும், நிறுவனத் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற வாசகமும், அதேபோல் அவரின் பிறப்பு மற்றும் இறப்பு தேதிகளும் இடம்பெற்றிருந்தன. இதேபோல் சந்தனப் பேழையின் மற்றொரு பக்கத்தில் ‘கேப்டன்’ என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக குழிக்குள் இறக்கப்பட்டபோது உறவுகளும், நண்பர்களும், தொண்டர்களும் கதறி அழும் காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. மக்கள் அஞ்சலி செலுத்தி சென்று திரும்ப ஏதுவாக பாதைகள் அமைக்கப்பட்டன. இதனால் மக்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான போலீஸார் ஈடுபட்டனர்.சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு வரையிலான இறுதி ஊர்வலம் முழுவதுமே மக்கள் வெள்ளத்தாலும், அவர்களின் கண்ணீராலும் நிரம்பின.
இறுதி அஞ்சலி
முன்னதாக (டிச.28) அதிகாலை 6.30 மணியளவில் விஜயகாந்த் உயிரிழந்தார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்த அங்கிருந்து உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. விடிய விடிய தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். முறையான ஏற்பாடுகள் இல்லாததால் அஞ்சலி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்தது.
தீவுத்திடலில் நேற்று காலை விடிந்ததில் இருந்தே திரைப் பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்திவந்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரும் இன்று அஞ்சலி செலுத்தினர்.அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்களுடன் ஆயிரக்கணக்கான மக்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.