தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் உடல் நலக்கோலாறு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தான் விஜயகாந்த் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான வீடியோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். அதன்பிறகு அரசியலில் நுழைந்தார். தேமுதிக என்ற கட்சியை உருவாக்கி எம்எல்ஏ ஆனார். அதோடு தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்தார்.

அதன்பிறகு அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து திரைத்துறை மற்றும் அரசியலில் இருந்து அவர் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் தான் கடந்த மாதம் 18ம் தேதி திடீரென்று விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். விஜயகாந்த்துக்கு காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த போதிலும் அவரது உடல் நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் குழு மீண்டும் தீவிர சிகிச்சையை தொடங்கியது.இதற்கிடையே தான் விஜயகாந்த் நலம்பெற அவரது ரசிகர்கள் மற்றும் கட்சியினர் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே விஜயகாந்துடன் எடுத்து கொண்ட போட்டோவை மனைவி பிரேமலதா வெளியிட்டார். அதன்பிறகு அவர் வெளியிட்ட வீடியோவில் ‛‛விஜயகாந்த் நலமாக இருக்கிறார். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருந்தேன்.நாங்கள் விஜயகாந்த் உடனேயே இருக்கிறோம். மருத்துவமனையில் எந்த வித பரபரப்பும் இன்றி அமைதியாக நல்ல படியாக விஜயகாந்த் இருக்கிறார். இந்த பரபரப்புகள் வதந்திகள் அனைத்துமே வெளியேதான் உலவிக்கொண்டு இருக்கிறது’’ என வதந்தி செய்திகள் குறித்த கவலையை பகிர்ந்து இருந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் விஜயகாந்த் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவன் விஜயகாந்திடம்‛‛உன்னால முடியும்.. உன்னால முடியும்..’’ என உருக்கமாக கூற விஜயகாந்த் வீறுகொண்டு எழுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதோடு அந்த வீடியோவின் கீழ்பகுதியில் விஜயகாந்த் தனது மனைவி, மகனோடு இருக்கும் போட்டோ இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவில் விஜயபிரபாகரன், ‛‛கேப்டன் 100 சதவீதம் சிங்கமாக இருக்கிறார். கேப்டன் நன்றாக இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டும். அவர் இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார். நாம் அனைவரும் தேமுதிகவாக கேப்டனுடன் இருப்போம்’’ என தெரிவித்துள்ளார்.