தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 2021ம் ஆண்டு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக போட்டியிட்டு அதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவராக மு க ஸ்டாலின் இருந்த போது, தனது குடும்பத்தில் இருந்து இனி யாரும் அரசியலுக்கு வரமாட்டார் என ஒருசமயம் ஓர் டிவி நிகச்சி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில் உதயநிதியின் அரசியல் வருகையை வாரிசு அரசியல் செய்கின்றனர் என்றே பலர் கடுமையாக குற்றம் சாட்டினர். அதற்க்கு ப்ச்தில் கூரிய உதயநிதி, என்னை சாடுபவர்களுக்கு நான் என் செயலால் பதில் சொல்வேன் என்றார். தற்போது வரை அந்த குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டும் வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது தான்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். மேலும் அமைச்சரவைப் பட்டியலில் பல மூத்த அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி 10 வது இடத்திலும் அவரது பெயர் இடம் பெற்றது அந்தக் கட்சிக்குள்ளேயே பெறும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சராக பொறுப்பேற்றப் பின்பு முதல்முறையாக பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து, நீட் ரத்து உள்ளிட்ட தமிழகத்திற்கு தேவையான சில முக்கிய கோரிக்கைகள் பற்றி பிரதமரிடம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து திமுக அமைச்சர்களும், கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியான பிரதான இடத்தை உதயநிதிக்கு கொடுத்து மேடைகளில் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தான் அவர் தனது தந்தையை விட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் விரைவில் குடியேற போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் வசித்து வரும் வீட்டை அலுவலகமாகவும் பயன்படுத்தி வருகிறார். அதனால் அவரைக் காண தினமும் அரசு அதிகாரிகள், முக்கியமானவர்கள் உள்ளிட்ட பலர் வருகை புரிந்து கொண்டே இருப்பார்கள். மேலும், முதல்வரின் வீடு இருக்கும் பகுதி என்பதால் அந்த சாலையில் வாகன போக்குவரத்து எப்போதும் இருக்கும்.

தற்போது முதல்வரின் மகனும் அமைச்சர் ஆகிவிட்டதால், அவரை சந்திப்பதற்கும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் தினமும் வந்து செல்கின்றனர். எனவே ஒரே வீட்டில் இரு முக்கியமான நபர்களை காண வருவதால் அப்பகுதியில் மக்களுக்கு அதிக நெருக்கடி ஏற்படுகிறது.
இந்த இட நெருக்கடி சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, அமைச்சர்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் அரசு பங்களாவில் குடியேற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அவர் குடியேற போகும் ‘குறிஞ்சி’ என்ற பெயர் கொண்ட இந்த பங்களா சுமார் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டது எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த பங்களாவில் சபாநாயகர் அப்பாவு வசித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் மலரகம் என்ற பங்களாவுக்கு மாறி சென்றுவிட்டார். தற்போது குறிஞ்சி பங்களா புதுப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பங்களாவை சுற்றி பிரம்மாண்டமான தோட்டமும் உள்ளது. பங்களாவில் பல்வேறு விதமான வசதிகள், விசாலமான கூட்ட அரங்குகளும் உள்ளன.

கிரீன்வேஸ் சாலையில் 76 அரசு பங்களாக்கள் உள்ளதாக தெரிகிறது. இதில் தான் அனைத்து அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வசித்து வருகின்றனர்.
மேலும் சென்னையில் உள்ள பிற இடங்களுக்கு இங்கிருந்து செல்வது சுலபமாக இருக்கும் என்பதாலேயே இங்கு அரசு பங்களாக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் இந்த பங்களாவிற்கு தன் குடும்பத்துடன் குடியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மு.க ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது, குறிஞ்சி பங்களாவில் தான் குடியிருந்தார் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்ற பேச்சு அரசல் புரசலாக எழுந்து வரும் நிலையில், குறிஞ்சி பங்களாவுக்கு அவர் செல்வது அரசியல் அரங்கில் பேசு பொருளாக மாறியுள்ளது.
வந்தவுடன் சட்ட மன்ற உறுப்பினர் அடுத்து அமைச்சர். அந்த வரிசையில் துனண முதல்வர் பொறுப்பும் சர்வ சாதரணமாக கிடைத்துவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
முதல்வர் பிள்ளை என்றால் சும்மாவா.?