திருச்சி சிவா ஆதரவாளர்கள்மீது தாக்குதல்: திமுகவினர் 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
திருச்சியில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய திருச்சி சிவா எம்.பி ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு, செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இதையறிந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் சிலர் அங்கு சென்று, காவல் நிலையத்துக்குள் புகுந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

சேதப்படுத்தப்பட்ட வாகனம்
இதுதொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் மோகன் அளித்த புகாரின்பேரில் 10 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்த போலீஸார், திமுக கவுன்சிலர்கள் காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் துரைராஜ், பொன்னகர் பகுதி பிரதிநிதி திருப்பதி ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் திருப்பதியைத் தவிர மற்ற 4 பேரும் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதன்மீதான விசாரணை நேற்று நடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பாலாஜி, திமுகவினர் 5 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.