புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக முதல்வர் எதிர்ப்பு.விவசாயிகளை கருத்தில் கொண்டு பிரதமருக்கு கடிதம்.
தமிழகத்தில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் ஏலம் கோரப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகிய அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தற்போதுதான் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்த்து வருகிறது.இந்த நிலையில் இப்படியா?என்கிற கேள்வி எழுகிறது,

இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில், சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 தொகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை, மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை ஆகும் என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், “இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன, அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் ஆகியவைவிவசாய நிலங்கள் உள்ளடக்கிய பகுதி. காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும், “அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்திருந்தால், இப்பிரச்னைகளை தெளிவுபடுத்துவதுடன், ஏலத்திற்கான அறிவிக்கை வெளியீட்டால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலையில், மதிப்புமிக்க விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுரங்கத் வட்டாரங்கள் வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும், ஏலத்தில் இருந்து விலக்கிட வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற மாநில அரசின் தொடர்புடைய பொது அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பு ஒன்றிய அரசு, மாநில அரசில் உள்ள தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்து தேவையற்ற போராட்டங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த கடிதம் பிரதமர் தமிழகம் வரும் நிலையில் அனுப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.