சீர்காழி அருகே அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்த மூன்று பெண்கள் கைது போலீஸார் விசாரணை. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பலரும் உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழக அரசு உத்தரவுவின் படி பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆச்சாள்புரம் கிராமத்தில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மயிலாடுதுறை எஸ்.பி. மீனா உத்தரவின் பேரில் சீர்காழி டிஎஸ்பி. லாமேக் தலைமையில் போலீசார் ஆச்சாள்புரம் வள்ளுவர் தெருவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் வீட்டில் அரசு அனுமதி பெறாமல் நாட்டு வெடிகள் தயாரிப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவகுமார் வீட்டில் நடத்திய சோதனையின் போது அங்கு சிவகுமாரின் மனைவி கலா வயது 26 என்பவரும், பழனிச்சாமி மனைவி இந்திரா வயது 56 என்பவரும், மச்சராஜ் மனைவி தனுஷ் வயது 50 என்பவரும் ஆகிய மூவரும் நாட்டு வெடிகளை தயாரித்து உள்ளனர்.
இதை அடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களைக் கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு, கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சிவகுமார் பணியாற்றும் பட்டாசு குடோனில் இருந்து வெடி மருந்தை எடுத்து வந்து கொடுத்து இவர்கள் மூவரும் சேர்ந்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் சிவகுமார் வீட்டில் இருந்த நான்கு கிலோ எடையுள்ள சல்பர், பொட்டு உப்பு, அலுமினிய பவுடர், வெடி மருந்து மற்றும் மைதா மாவு, மிக்ஸிங் கரித்துள், திரிநூல், நூல்கண்டு, 40 கிலோ அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், தலைமறைவான சிவகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்த வெடி மருந்தை தீயணைப்பு படை வீரர்கள் கைப்பற்றி கொள்ளிடம் ஆற்றில் கரைத்து செயல் இழக்க வைத்தனர். மேலும் இது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.பின்பு இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.