திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே நாராயணபுரம் ஊராட்சி எக்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மகன் பிரகாஷ். இவன் அம்மையார்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பிரகாஷ் அவரது பெரியப்பா மகன்கள் தயாநிதி, சந்தோஷ் ஆகியோருடன் அவர்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நீச்சல் பயிற்சிக்கு சென்றார்.

வயிற்றுப் பகுதியில் கேன் கட்டிக்கொண்டு பிரகாஷ் கிணற்றில் நீச்சல் பயிற்சி செய்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கேன் உடைந்ததில், நீரில் மூழ்கினார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றும் முயற்சி செய்தும் நீரில் மூழ்கியதால் சோளிங்கர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

கிராம மக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய மாணவனை நீண்ட நேரம் தேடியும் கிடைக்காத நிலையில் சடலமாக மீட்டனர். இதனையடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நீச்சல் பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.