- சோழவரம் அருகே மது போதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை சுத்தியலால் தாக்கிய மனைவி. கணவன் மருத்துவமனையில் அனுமதி. மனைவியிடம் போலீஸ் விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பம்மதுகுளம் காட்டுநாயக்கன்பழங்குடிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான கருணாகரன் (39). இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கருணாகரன் தினந்தோறும் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவது வாடிக்கையாக நடந்துள்ளது. வழக்கம் போல இன்றும் கருணாகரன் மதுபோதையில் சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சரஸ்வதி வீட்டில் இருந்த சுத்தியலால் கருணாகரன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கருணாகரன் மயங்கியுள்ளார். இதனையடுத்து சரஸ்வதி இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 108அம்புலன்ஸ் மூலம் கருணாகரனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவனை தாக்கிய சரஸ்வதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவனை, மனைவி சுத்தியலால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.