திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செடிப்பட்டியில் இறந்தவர் உடலை சுமந்து ஆற்றை கடக்கும் அவலம். இறந்தவர் உடலை சந்தனவர்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ளத்தில் கடந்து சென்று சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைத்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டியில் பல நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களில் யாரேனும் ஒருவர் இறந்தால் அவர்களை புதைப்பதற்கு சந்தனவர்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ளத்தில் கடந்து சென்று சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் அதிகளவு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் நிலை உருவாகும். அந்த சமயத்தில் இறந்தவர் உடலை தண்ணீரில் சிரமத்துடன் தூக்கி சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே இறந்தவர் உடலை புதைப்பதற்கு ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் செடிப்பட்டியைச் சேர்ந்த ராமன் (வயது 65) என்ற விவசாயி உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் நடைபயண ஏற்பாடு மேற்கொண்டனர்.

ஆற்றில் தண்ணீர் சென்றதால் இறந்தவர் உடலை தோள் மீது சுமந்தபடி ஆற்றுத் தண்ணீரில் இறங்கி சிரமத்துடன் கடந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைத்து சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிருவாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.