முகப்பேரில் தனது நண்பரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார். சென்னை அமைந்தகரை எம்.எம் காலனியைச் சேர்ந்தவர் லோகேஷ் வயது (25). இவர் அம்பத்தூரில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 8-ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்ற லோகேஷ், மறுநாள் வரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்ட போது வெகுநேரமாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அச்சமடைந்த பெற்றோர் லோகேஷின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்த போது அவர் அங்கும் இல்லை என்பது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில் அமைந்தகரை காவல் நிலையத்தில் லோகேஷின் தந்தை அசோக் வயது (50), எனது மகனை காணவில்லை, கண்டு பிடித்துத் தாருங்கள் என்று புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான தனிப்படை போலீசார், லோகேஷின் பைக் மற்றும் அவரது செல்போன் எண் மூலம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே லோகேசுடன் அதே நிறுவத்தில் பணியாற்றும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் வயது (27) என்பவரும், அதே நாளில் காணாமல் போனதாக அவரது அக்கா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரே நாளில் லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் காணாமல் போனதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாஞ்சிநாதன் தனது அக்காவிற்கு வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது அக்கா, உடனடியாக அம்பத்தூர் போலீசாரிடம் அதனை பற்றி தெவித்தார். இதனையடுத்து அமைந்தகரை இன்ஸ்பெக்டர் கிருபாநிதி, அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் வாட்ஸ்அப் மெசேஜ் வந்த செல்போன் நம்பரை வைத்து டவர் மூலம் விசாரணை செய்த போது, சென்னை முகப்பேர் பன்னீர் நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியை காட்டியது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த விடுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையின் கதவு மட்டும் உள்புறமாக பூட்டி இருந்ததால் சந்தேகம் அடைந்து வெகுநேரமாக தட்டிப்பார்த்தனர். ஆனால், கதவு திறக்கப்படாததால் விடுதி ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அங்கு லோகேஷ் இறந்த நிலையில் தரையிலும், வாஞ்சிநாதன் தூக்கிட்ட நிலையிலும் பிணமாக கிடந்தனர். தகவலறிந்த சாரும் அங்கு வந்து, 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் ஒரு வருடமாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 8-ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்ற இருவரும், பின்னர் முகப்பேரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வாஞ்சிநாதன், லோகேஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

வாஞ்சிநாதனுக்கு அவரது வீட்டில் சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதனை அறிந்த லோகேஷ், வாஞ்சிநாதனை பிரிய மனமில்லாமல் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாஞ்சிநாதன், லோகேஷை கொலை செய்தது தெரியவந்தது. ஓரினச்சேர்க்கையின் தகராறில் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது வேறு காரணம் உள்ளதா எனவும், தனியார் விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.