- மகனை காப்பாற்றுவதற்காக கல்லணைக் கல்வாய்க்குள் இறங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் சீனிவாசபுரம் அருகே செவ்வப்பநாயக்கன் ஏரி பகுதியைச் சேர்ந்தவர் பி. ராஜா (56). வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய இவர் தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெரும்பாலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில், இவர் வீட்டில் வளர்க்கும் நாயைக் குளிப்பாட்டுவதற்காக தனது மகன் ராகுல், மகள் லாவண்யாவுடன் காரில் தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை மானோஜிபட்டி பாலம் அருகே கல்லணைக் கால்வாய்க்கு வியாழக்கிழமை முற்பகல் சென்றார்.கால்வாயில் குளிப்பாட்டப்பட்ட நாய் பள்ளத்துக்கு சென்றதால், அதைக் காப்பாற்றுவதற்காக ராகுல் சென்றார். இருவரும் தண்ணீரில் சிக்கியதைப் பார்த்த ராஜாவும் ஆற்றுக்குள் இறங்கி மீட்க முயன்றார். ஆனால், கால்வாயில் நீரோட்டம் வேகமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கிய ராஜா அடித்துச் செல்லப்பட்டார். கரையில் இருந்த பொதுமக்கள் கால்வாயில் இறங்கி ராகுலையும், நாயையும் காப்பாற்றினர்.இதையடுத்து, ராஜாவை தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உள்ளிட்டோர் தேடி வந்த நிலையில், கண்டிதம்பட்டு பகுதியில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.இது குறித்து கள்ளப்பெரம்பூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.