மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவரது கூட்டாளி செந்தில். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மனக்கசப்பு ஏற்பட்டதால் வரிச்சியூர் செல்வத்திடம் இருந்து செந்தில் தனியாக பிரிந்து வந்து விருதுநகரில் குடியேறினார்.
ஒரு நாள் திடீரென வரிச்சியூர் செல்வம் அழைப்பதாக மனைவி முருகலட்சுமியிடம் கூறிவிட்டு கடந்த 2021 ம் ஆண்டு மதுரைக்குச் சென்ற செந்தில் மீண்டும் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் செந்தில் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து செந்திலின் மனைவி முருகலட்சுமி விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் கனவரை காணவில்லை என புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக வரிச்சியூர் செல்வத்தில் செல்போன் எண்ணை போலீசார் சோதனை செய்ததில் செந்தில் கடைசியாக வரிச்சியூர் செல்வத்திடம் பேசியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வரிச்சியூர் செல்வத்தை பிடித்து விசாரித்தனர்.
மேற்படி விசாரணையில் வரிச்சியூர் செல்வம் செந்திலை சென்னையில் வைத்து கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வம் விருதுநகர் அழைத்து வரப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.