வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட அல்லேரிமலை அடுத்த அத்தி மரத்தூர் மலை கிராமம் இந்த கிராமத்தைச் சேர்ந்த தம்பதி விஜய் – பிரியா. நேற்று முன் தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இவர்களின் 1½ வயது மகள் தனுஷ்காவை பாம்பு கடித்தது. நீண்ட நேரம் குழந்தை அழுது கொண்டிருந்ததை தொடர்ந்து பாம்பு கடித்ததை உணர்ந்தனர் பெற்றோர். உடனடியாக அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றனர்.
குழந்தையை தூக்கிக் கொண்டு சாலை வசதி இல்லாததால் 10 கிலோமீட்டர் தூரம் குழந்தையை கையில் சுமந்து சென்றனர். இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்ல தாமதமாகி வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

வேதனை என்னவென்றால் அதே மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்த பிறகு குழந்தை உடலை வீட்டிற்கு ஆம்புலன்சில் கொண்டு வந்தவர்கள் சாலையில்லாததால் வழியிலேயே இறக்கி விட்டனர். மீண்டும் இறந்த குழந்தையை 10 கிலோ மீட்டர் தூரம் பெற்றோர் மலைப்பாதையில் கையில் சுமந்து சென்றனர்
சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து அல்லேரி மலைப் பகுதியில் சாலை வசதி கேட்டு பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அரசுத்துறையினர் அதை கண்டு கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

வயதானவர்கள் குழந்தைகள் பெண்கள் என இப்படித்தான் ஒவ்வொரு முறையும் உடல் நல போராது ஏற்படும் போது நடந்தே மருத்துவமனைக்கு சென்று வருவதாக இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் இன்னமும் நீடித்து வருகிறது. ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரை காவு கொண்ட பிறகாவது அரசு தனிக்கவனம் செலுத்தி இந்த மலைக் கிராமங்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்