பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டடுள்ள சிறுமியை மீட்டுத்தரக்கோரி அவரது தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, அவரது பெற்றோர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் மீது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கின்றனர்.
அப்போது காவல் ஆய்வாளர் தங்களை தாக்கியதாகவும்,
சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் , பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுமி சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்டுத்தர வேண்டுமெனக்கோரி அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மேலும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது , ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக், பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பெற்றோருடன் உள்ளதாகவும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படவில்லை எனவும் கூறினார். எனவே, இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெறப்பட்ட வாக்கமூலத்தின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும்,இதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். மேலும், புகார் அளிக்க சென்ற சிறுமியின் பெற்றோர் காவல்துறையால் தாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து , மனு குறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பர் 24ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.