திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் ஏற்கனவே நியமித்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி குழு தாக்கல் செய்த அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேபோல கிரிவலப்பாதை மற்றும் மலையை ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு சட்டவிரோதமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் யானை ராஜேந்திரனும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையி்ல், நில நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அறநிலையத் துறை இணை ஆணையர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இக்குழு அவ்வப்போதைக்கு ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, பட்டாக்களை ரத்து செய்வது குறித்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி குழுவுக்கு உத்தரவிட்டு,விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.