- இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி வழக்கு.
இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களுக்கான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன- ஒன்றிய அரசு. மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது, அதைத்தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த திருமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” கடந்த 9ஆம் தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது நான்கு மோட்டார் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தங்களின் வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது கடலோர காவல்துறையினரின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லை பகுதிக்குள்ளேயே மீன் பிடித்துள்ளனர். அவர்களை கைது செய்தது சட்டவிரோதமானது.
பிற மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும்போது மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகையில் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறது. ஆகவே இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.ஒன்றிய அரசு தரப்பில், “இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களுக்கான சட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அரசியல் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/prison-department-dig-who-used-a-life-sentence-prisoner-for-domestic-work-madras-high-court-to-take-departmental-action/
அதையடுத்து, மனுதாரர் தரப்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.