கோவை மசக்காளிபாளையம் பாலன் நகரில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று 5 ஆயிரம் பேருக்கு தையல் இயந்திரம், கிரைண்டர் உட்பட 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர், கலைஞரின் நூற்றாண்டு விழா உலகில் தமிழர்கள் வாழும் இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகள் பேராசிரியர், நாவலர், ஆகியோருக்கும் நூற்றாண்டு விழா நடத்தப்பட்டது.
தற்போது கலைஞர் நூற்றாண்டு விழா நடந்து வருகிறது. கலைஞரின் நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வாக சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞா் நூற்றாண்டு நினைவு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை ஆயிரம் படுக்கை வசதியுடன் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை எடுத்தவர் கலைஞர்.
இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டம் கொண்டு வந்தவர் கலைஞர். நான் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என கூறினார். மேலும், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் ரூ.114 கோடி பிரம்மாண்டமான நூலகம் திறக்கப்பட உள்ளது. நாங்கள் கழக இளைஞரணியில் இருந்து 30 வருடமாக பயணித்து வருகிறோம்.
ஸ்டாலின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவை, சென்னை என 11 மாநகராட்சியில் பெண் மேயர் உள்ளனர். பெண்களுக்கு நாட்டில் எங்கும் இல்லாத வகையில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் மூலம் இரண்டு ஆண்டுகளில் ரூ.300 கோடி அளவில் பயணம் செய்துள்ளனர்.
இது தமிழக வரலாற்றின் சிறப்பு. அண்ணா பிறந்தநாள் முன்னிட்டு வரும் செப்டம்பர் 15-ல் உரிமை தொகை அளிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். திருமண உதவி திட்டம் உள்பட கலைஞர் ஏராளமான திட்டத்தை கொண்டு வந்தவர். கலைஞர் நூறாண்டு கடந்து வாழ்வார் என பேசினார்.