தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் 1038 ஆம் ஆண்டு சதய விழா மங்கள இசை, தமிழ் முறைப்படி திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. நகரமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பி தமிழர்களின் கட்டட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றி இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். அவர் பிறந்த தினம் ஆண்டு தோறும் அரசு சார்பாக சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு நாட்கள் நடைபெறும். 1038 ஆம் ஆண்டு சதய விழா மங்கள இசை, தமிழ் முறைப்படி திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது.

டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை மற்றும் களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து ராஜராஜ சோழன் புகழை போற்றும் வகையில் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், பரதநாட்டிய நிகழ்வு நடைபெறுகிறது. சதய விழாவை ஒட்டி ராஜராஜ சோழன் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. பெருவுடையாருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான மாமன்னன் இராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நாளை நடைபெறுகிறது.
அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து பல்வேறு தரப்பினர் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு 48 வகையான பேரபிஷேகம் நடைபெற உள்ளது. சதயவிழாவை ஒட்டி நாளை தஞ்சைக்கு உள்ளுர் விடுமுறை அறிக்கை விடப்பட்டுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு தஞ்சை நகரமே விழாக்கோலமாக பூந்துள்ளது.

இந்த ஆண்டு சதய விழாவை முன்னிட்டு தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்குபெறும் மாபெரும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி அய்யங்குளம் பகுதியில் நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான மாமன்னன் ராஜராஜன் விருது மதுரை செந்தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் தெட்சிணாமூர்த்தி மருத்துவர் செல்வராஜ் ஓய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குனர் பழனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட உள்ளது.