சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் விஜயலட்சுமி. இவர், வண்டலூர் அடுத்த படப்பை பகுதியில் உள்ள கடைகளில் தேநீர், பிரெட் ஆம்லேட், கமர்கெட் என வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்று விடுவார் இதனால் அந்த பகுதிகளில் கடை நடத்துகிறவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். பொதுமக்கள் இப்படி செய்தால் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் போலீஸே இப்படி செய்தால் என்ன செய்வது என்று கவலை கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சம்பவத்தன்று கடை ஒன்றில் ஓசி கமர்கெட் வாங்கி சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றுள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
புகாரைத் தொடர்ந்து, கடையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் சோதிக்கப்பட்டன. அதில் பெண் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, ஏட்டு ஜெயமாலா, இரண்டு ஆயுதப்படை போலீஸார் என நான்கு பேர் காசு கொடுக்காமல் தின்பண்டங்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உட்பட நான்கு பேரையும் சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். சம்பவத்தன்று கடையில் வடமாநில தொழிலாளி ஒருவர் பணியில் இருந்துள்ளார்.
அவருக்கு தமிழ் சரியாக தெரியாத நிலையில் காசு கொடுக்காமல் சென்றுள்ளனர். அப்போது அவர் காசு கேட்டதற்கு மிரட்டலும் விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி இரண்டாவது திருமணம், மாமூல் உள்ளிட்ட குற்றாச்சாட்டுகளுக்காக துறைரீதியான விசாரணைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.