கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் .
இச்சம்பவத்தால் தான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , விஜயகுமாரின் மறைவு காவல்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார் .
அவரது மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மு க ஸ்டாலின் அவர்கள் , “விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.

அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிற இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார் .
2009 ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பயிற்சியை முடித்த விஜயகுமார் இந்த ஆண்டு ஜனவரியில் கோயம்பத்தூர் சரக டிஐஜியாக பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன் சென்னை அண்ணாநகர் காவல் துணை ஆணையராக பணியாற்றியவர் .
இதற்கு முன்பு காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது சொந்த ஊரான தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விஜயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான தேனியில் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது .