மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மணிப்பூரில் கடந்த 200 நாட்களுக்கு மேலாக இன கலவரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலவரக்காரர்கள் அங்குள்ள பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ நாடு முழுவதும் பரவி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தலைவர்களும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து, வருகின்றனர்.

நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சர்போஜி அரசு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் மாணவர்கள் மணிப்பூரில் நடைபெற்ற கலவரங்களுக்கு முறையான நீதி விசாரணை வேண்டும், என்றும் தொடர்ந்து பெண்களுக்கு அநீதி இழைக்கும் நிலை தொடரக்கூடாது என்றும், பெண்களுக்கு ஆதரவான நிலையில் அரசு செயல்பட வேண்டும் என்னும் வகையில் கைகளில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.