நகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை வரியையும் சேர்த்து 100% வரி வசூல் செய்யப்பட்டதன் மூலம், கடந்த ஆண்டில் தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான விருது மற்றும் ரூ.15 லட்சம் ரொக்க பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பெற்றுள்ளது .
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில், 31 ஆயிரம் வரியினங்கள், 16 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 12 லட்சம் காலிமனை இனங்கள், 311 கடை வாடகை மற்றும் குத்தகை இடங்கள் உள்ளது.
நகராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலுவை வரிகள் அனைத்தும் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் வசூல் செய்து முடிக்கப்பட்டது.
நகராட்சிக்கு வரவேண்டிய நிலுவை வரியையும் சேர்த்து 100% வரி வசூல் செய்யப்பட்டதன் மூலம், கடந்த ஆண்டில் தமிழகத்தின் சிறந்த நகராட்சிக்கான விருது மற்றும் ரூ.15 லட்சம் ரொக்க பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி வென்றது.
இந்த பெருமையைத் தக்கவைக்கும் பொருட்டு, இந்த ஆண்டு சொத்து வரி ரூ.4 கோடி, குடிநீர் வரி ரூ.1.76 கோடி,
வாடகை மற்றும் குத்தகை உள்ளிட்ட வரியற்ற வருவாய் ரூ.1.58 கோடி என
அனைத்து வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் நூறு சதவீதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நூறு சதவீதம் வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம் தெரிவிக்கையில்,
`கடந்த ஆண்டுகளில் வரி நிலுவைத் தொகை இருந்ததால், வரி வசூலில் சிரமம் நிலவியது.
இந்த ஆண்டு நிலுவை வரி இல்லாததால், நடப்பு நிதியாண்டின் வரி மற்றும் வரியற்ற வருவாய் இனங்கள் அனைத்தும் 100% வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, வரியினங்கள் அனைத்தும் வசூல் செய்து முடிக்கப்பட்டுவிட்டது.
இதன்மூலம் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கீட்டைப் பெற முடியும் என நம்புகிறோம்.
மேலும் நகராட்சியின் வரியற்ற வருவாயை பெருக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
லால்குடி நகராட்சியில் 100% வரி வசூல் செய்ததற்காக அதன் ஆணையர், ஊழியர்களுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுக்க இன்னும் சில நகராட்சிகள் 100% வரி வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. ஆனால், பல நகராட்சிகள் இந்த வரியை முழுமையாக வசூல் செய்யாமல் இருக்கின்றன.
இந்த நிலைக்கு இந்த மாநகராட்சிகளில் உள்ள அதிகாரிகள் காரணமா அல்லது அரசியல்வாதிகள் காரணமா என்பதை தமிழக அரசாங்கம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போதுதான் நகராட்சிகளில் வளர்ச்சிப் பணிக்கான நிதியை மாநில அரசால் சரியாக ஒதுக்கீடு செய்ய முடியும்!