- யூ டியூபர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமர்வை அமைக்க கோரிய பொது நல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அரசின் குறைகளை அம்பலப்படுத்தும் யூ டியூபர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி அமர்வை அமைக்கக் கோரி, எஸ்.முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, யூ டியூபர் சவுக்கு சங்கர், பெலிஸ் ஜெரால்ட் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றை விரைந்து விசாரித்து முடிக்க தனி அமர்வை அமைக்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில், தனி அமர்வு அமைப்பது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிறப்பு அமர்வை அமைப்பதற்கான அதிகாரம் தலைமை நிதிபதிக்கு தான் உள்ளது.மேலும், பொதுநல வழக்கு என்பது முக்கியமான ஆயுதம் என்பதும் சமூக நீதியை மேம்படுத்தும் கருவி என்பதும் சட்டத்தில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் எந்த ஆதாரங்களும் இல்லாமல் பொதுநல வழக்கு தொடர்வது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகும். மனுதாரர் கூறுவதைபோல் யூடியூபர் சங்கரும், ரெட்பிக்ஸ் மீடியா எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் அரசியலமைப்பில் தரப்பட்டுள்ள உரிமை குறித்து அறியாதவர்கள் இல்லை. இதுபோன்ற நபர்கள் சிறப்பு அமர்வு கோரி உச்ச நீதிமன்றத்தை கூட அணுகுவார்கள். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு மற்றும் கோரும் நிவாரணம் என்பதை ஏற்க முடியாது. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு, தெளிவில்லாத குற்றச்சாட்டாகும். அதற்கான ஆதாரங்களும் தரப்படவில்லை. எனவே, எந்தெந்த வழக்குகளை விசாரிக்க தனி அமர்வு அமைக்க வேண்டும் என்பது அரசியலைப்பில் தலைமை நீதிபதிக்கு தரப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.