இந்தியாவிலே கல்வி அறிவு பெற்றோர் எண்ணிக்கையில் கேரள மாநிலம் முதன்மையான மாநிலமாக உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலானோர் கல்வி அறிவை பெற்றுள்ளனர்.
கேரள அரசால் வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எழுத்தறிவு மற்றும் தொடர் கல்வியை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் நோக்கத்திற்காக , ‘அனைவருக்கும் கல்வி மற்றும் எப்பொழுதும் கல்வி’ என்ற முழக்கத்தை பரப்பி,
தொடர் கல்வி முயற்சியை கேரளா அரசு தொடங்கியது. தமிழகத்தில் அறிவொளி இயக்கம் செயல் பட்டது போலவே, கேரளா மாநிலத்தில் சம்பூர்னா சாஸ்திரா என்ற எழுத்தறிவு திட்டத்தின் கீழ்,
வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடும், வயது முதிர்ந்தவர்கள் அவர்களது பெயர்களை கையெழுத்தாக இடவேண்டும் என்பதன் அடிப்படையிலும் கல்வி கற்றுக் கொடுத்து வருகிறது.
இந்த திட்டத்தில் ஆர்வம் உள்ள வயது முதிர்ந்தவர்கள் இணைந்து கல்வி கற்று வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழகத்திலிருந்து கேரளாவின் ஏலக்காய் தோட்ட வேலைக்கு சென்ற கமலக்கண்ணி என்ற 108 வயதாகும் மூதாட்டி கல்வி கற்று வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தை பூர்வீகமாக கொண்ட கமலக்கண்ணி என்ற மூதாட்டி இரண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது குடும்ப வறுமை காரணமாக கேரளாவில் உள்ள வன்டன்மேடு பகுதியில் குடும்பத்துடன் குடியேறி,
ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

கேரளாவில் அதிகளவு ஏலத் தோட்டம் உள்ளதால் தமிழகப் பகுதியில் இருந்து வேலை ஆட்கள் மொத்தமாக அங்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
அந்த வகையில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பாக மொத்தமாக குடும்பத்துடன் குடியேறி ஏலத்தோட்ட வேலை செய்து வந்துள்ளார் கமலக்கண்ணி.
தொடர்ந்து தோட்ட வேலை செய்து வந்துள்ளதால் கல்வியை பெற முடியாத நிலையில் இருந்துள்ளார் கமலக்கண்ணி.
கடுமையாக உழைத்ததன் அடிப்படையில் தற்போது 108 வயது ஆனாலும் உடல் ரீதியாக ஆரோக்கியமான நிலையில் உள்ளார் கமலக்கண்ணி.
நல்ல கேட்கும் திறன் மற்றும் பார்வை திறன் உள்ள 108 வயது மூதாட்டியான கமலக்கண்ணி கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து கல்வி கற்க தொடங்கியுள்ளார்.
108 வயதில் கேரளாவில் கல்வி பயின்று, தேர்வில் நூற்றுக்கு 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளதை அடுத்து, இந்த திட்டத்திற்கு முன் உதாரணமாக திகழும் மூதாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.