காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பெரிய ஏரிக்கரையில் பனை விதைகள் தன்னார்வ அமைப்பின் சார்பில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் பனைவிதைகளை பள்ளி மாணவ,மாணவியர் நடவு செய்தனர். பனைமரத்தின் சிறப்பியல்புகள் பின்வருமாறு ;
பூலோகத்தின் கற்பகத்தரு என்று போற்றப்படுவது பனைமரம். இம்மரம் சங்க காலத்தில் இருந்து தமிழர்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்திருந்தது. இதன் வேர் முதல் நுனிவரை அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு உயிரினங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது. இதன் வேர் பகுதி விறகாகவும், சேவு நிறைந்த தண்டுப்பகுதி வீடு கட்ட சட்டங்களாகவும், அதன் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்க பயன்படும் நாரும், ஓலை கூரை வேயவும், தடுப்பு கட்டவும், வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.
பனைமரம் மருத்துவகுணம் நிறைந்த பதநீர், கள், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கூடிய நொங்கு, பனம்பழம், பனங்கொட்டை, நார்சத்து மிகுந்த பனங்கிழங்கு ஆகியவற்றை தருவதுடன் பதநீரில் இருந்து பனைவெல்லம், கற்கண்டு ஆகியவையும் தயாரிக்கிறார்கள். பனைமரமானது மனித வாழ்வுக்கு தேவையானவைகளில் பெரும்பாலானவற்றை தந்தது. இதனால் அவற்றை நம் முன்னோர்கள் அனைத்து இடங்களிலும் நடவு செய்து பாதுகாத்தனர். காலச்சக்கரத்தில் கற்பகத்தரு பல இடங்களில் காணாமல் போய்விட்டது.

இன்று கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பனைமரங்களே உள்ளன. இதனால்தான் பனைவிதை நடவு திருவிழா ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதைகள் தன்னார்வ அமைப்பின் சார்பில் மூன்றாம் ஆண்டு ஒரு லட்சம் பனைவிதை நடவு திருவிழா நடைபெற்று வருகின்றது. அதன்படி நான்காவது வார களப்பணியில்,தன்னார்வு அமைப்பின் சார்பில் பனைவிதை நடவு விழா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பெரிய ஏரிக்கரையில் நடைபெற்றது.
இதில் விதைகள் தன்னார்வ அமைப்பினர்,திருவேணி அக்காடமி பள்ளி மாணவ மாணவியர்கள்,ஆதி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ,மாணவிகள் மற்றும் பூசிவாக்கம் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஆகியோர் ஏராளமானோர் கலந்துக்கொண்டு வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பெரிய ஏரிகரை, சாலை ஓரம் உள்ளிட்ட இடங்களில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.

இந்நிகழ்வில் வாலாஜாபாத் ஒன்றிய குழு துணைத்தலைவர் சேகர், பூசிவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் லெனின் குமார்,திருவேணி அக்காடமி முதல்வர் ஆனந்த் ,லயன்ஸ் சங்க மண்டலத்தலைவர் சசிகுமார், லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் வெங்கடேசன்,ஆதி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெங்கடேசன் மற்றும் விதைகள் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பசுமை சரண் உட்பட பலரும் பனை விதை நடவு திருவிழாவில் கலந்துகொண்டனர்.