- ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற விதிகளின்படி கூடுதல் விவரங்களை அளித்தால் அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றம் வகுத்த விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் தாங்கள் அனுமதி கேட்பதாகவும் ஆனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.மாநிலம் முழுவதும் ஒரே காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அணி வகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கடந்த ஆண்டு ஊர்வலத்தின் போது பிரச்னை ஏற்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதே? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் , அது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தனர்.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதி கோரும் பல இடங்களில் அணி வகுப்புக்கான மாற்று தேதி மற்றும் மாற்று வழித்தடம் குறிப்பிடப்படவில்ல எனவும்
எவ்வளவு பேர் கலந்து கொள்கிறார்கள் ? தொடங்கும் இடம் முடியும் இடம் குறிப்பிடப்படவில்லை எனவும் கூறினார்.
மேலும், யார் தலைமையில் ஊரவலம் நடைபெறுகிறது என்ற தகவல்களும் வழங்கப்படவில்லை எனக்கூறினார். உயர் நீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் படி, கூடுதல் விவரங்களை அளிக்கும்பட்சத்தில் அணி வகுப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு வழங்குவதில் அரசின் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதி, காவல்துறை கேட்கும் விவரங்களை அளிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.