சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம் கேட்டு உறவினர்கள் போராட்டம்..!

4 Min Read
பட்டாசு தொழிற்சாலையில் விபத்தில் உயிரிழந்த பெண்கள்

சிவகாசி அருகே பட்டாசு கடை, ஆலையில் வெடி விபத்துகள் 12 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு.தமிழக அரசு வழங்கிய நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி அழகாபுரி மக்கள் போராட்டம்.

- Advertisement -
Ad imageAd image

சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் பட்டாசு பரிசுப் பெட்டி பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மாரனேரி கீச்சநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு மருந்து கலவை தயாரித்த போது, வெடி விபத்து ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்தார்.

சிவகாசி அருகே உள்ள கங்காகுளத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் ரெங்கபாளையம் கம்மாபட்டியில் கனிஷ்கர் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு விதிமீறலில் ஈடுபட்டதால் இந்த ஆலை உரிமம் ரத்து செய்யப்பட்டது. பின்னர், ஆலை அருகே மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையின் உரிமம் பெற்று, பட்டாசு விற்பனை கடையை நடத்தி வந்தார். இந்த கடையின் பின்புறம், விதியை மீறி தகர கொட்டகை அமைத்து, பட்டாசு பரிசுப் பெட்டி (‘கிஃப்ட் பாக்ஸ்’) பேக்கிங் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் பட்டாசு கடையில் 15 தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பின்னால் உள்ள தகர கொட்டகையில், பரிசுப் பெட்டிகளை பேக்கிங் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பட்டாசு பெட்டி மீது, பிளாஸ்டிக் தாளை ஒட்டி, இயந்திரத்தில் வெப்பப்படுத்தி தொழிலாளர்கள் அதனை ஒட்டிக் கொண்டிருந்தனர்.

பாதுகாப்பு பணியில் போலிஸ்

அப்போது, வெப்பத்தில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. அந்த தீப்பொறி, அருகே இருந்த பட்டாசு கடைக்குள் விழுந்துள்ளது. கடையில் தீபாவளிக்காக அதிக அளவில் இருப்பு வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பிடித்து, சரமாரியாக வெடிக்க தொடங்கியது.

இதில், கடைக்குள் சாப்பிட்டு கொண்டிருந்த வடக்கு அழகாபுரியை சேர்ந்த மகாதேவி (50), பஞ்சவர்ணம் (35), பாலமுருகன் (30), தமிழ்ச்செல்வி (55), எஸ்.அம்மாபட்டி முனீஸ்வரி (32), அழகாபுரி தங்கமலை (33), அனிதா (45), லட்சுமியாபுரம் பாக்கியம் (35), குருவம்மாள் (55), இந்திரா (45), லட்சுமி (28), செல்லம்மாள் (40), முத்துலட்சுமி (36) ஆகிய 13 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

உடனடியாக சிவகாசி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுரை டிஜஜி ரம்யா பாரதி,விருதுநகர் எஸ்.பி. சீனிவாசப் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகளும் நேரில் வந்து பார்வையிட்டனர். இந்த விபத்தில் மேலும் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த அழகாபுரி பொன்னுதாய் (45), செம்பட்டையான்கால் கிராமத்தை சேர்ந்த சின்னதாய் (35) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த கடையை ஆய்வு செய்த விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன், ‘‘பட்டாசு கடையில் விதிமீறல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலும் ஒரு விபத்தாக சிவகாசி அடுத்த மாரனேரி கீச்சநாயக்கன்பட்டியில் முத்து விஜயன் என்பவரது பட்டாசு ஆலையில் நேற்று காலை பட்டாசு உற்பத்திக்காக மருந்து கலவையை தயாரித்தனர். அப்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில், வேம்பு (60) என்ற தொழிலாளி உடல் கருகி உயிரிழந்தார்.

தீபாவளி நெருங்கும் நேரத்தில், பட்டாசு ஆலைகள், கடைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி, பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்றும் பல்வேறு அரசியல் கடையினர் வலியுறுத்தியுள்ளனர்.மேலும் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

போராட்டம்

மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இந்த பட்டாசு வெடி விபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அழகாபுரி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஆண் ஐந்து பெண் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி போதாது எனவும் கூடுதலாக நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், உயிரிழந்த குடும்பம் ஏழ்மை குடும்பம் எனவும், வீட்டில் சிறு குழந்தைகள் உள்ளதாகவும் எனவே அவர் குடும்ப சூழ்நிலை கருத்தில் உண்டு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்,பட்டாசு ஆலை முன்பு பட்டாசு கடை வைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஏராளமான பொதுமக்கள் அழகாபுரி கிராமத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . ஏதும் நிகழாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share This Article
Leave a review