கோவை மாநகர இரவு முழுவதும் பெய்த கனமழை பெய்தது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீராலும் மேம்பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீராலும் பொதுமக்கள் அவதி. கோவையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீராலும் மேம்பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீராலும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கோவையில் கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கோவை மாநகர் பகுதிகளான ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், புலியகுளம், ரெட்பீல்டு, சுங்கம், ராமநாதபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர், ரயில் நிலையம், செல்வபுரம், இடையர்பாளையம், குனியமுத்தூர், போத்தனூர், சுந்தராபுரம் ஆகிய உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான கணுவாய், தடாகம், துடியலூர், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் கனமழை இரவு நேரங்களில் கொட்டித் தீர்த்தது.

இந்த நிலையில் நேற்று சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இந்த கனமழையால் சாலைகளில் மழை நீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமின்றி சாலையில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பயனீர் மில்ஸ் பகுதியில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் சில வீடுகளுக்குள்ளும் ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் உள்ள சிவவிஷ்ணு கோவில் அருகே உள்ள வீட்டிற்குள்ளும் மழைநீர் உள்ளே புகுந்ததால் வீட்டில் வசிப்போர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.இதனால் அப்பகுதிகளில் இரவு நேரங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக அவினாசி சாலை மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கியது. தற்போது மேம்பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரை, நீர் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கோவையில் மாநகரில் கனமழை பெய்யும் போதெல்லாம் இந்த மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,போக்குவரத்து செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் இதனை மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.