சமீப காலத்தில் பத்து தல திரைப்படம் பார்க்க சென்ற நரிக்குறவர் இன மக்களை திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களிலே மீண்டும் ஒரு சம்பவம் நரிக்குறவர் இன மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பள்ளிப்பட்டு சமத்துவப்புரத்தைச் சேர்ந்தவர் குப்பன் . நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் நேற்று தன்னுடைய பேரன் சித்தார்த் (5) என்ற சிறுவனுடன் மங்கலம்பேட்டையில் உள்ள ஒரு டீ கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார்.

அப்போது அந்த டீ கடையின் டீ மாஸ்டரிடம் டீ வாங்கி குடித்துக் கொண்டிருந்தபோது கடையின் உரிமையாளர் அண்ணாதுரை (60) என்பவர் அங்கு வந்தார் அப்போது நரிக்குறவர் இன மக்கள் அங்கே டீ குடித்துக்கொண்டிருந்ததை பார்த்து அவர்களை இழிவாக பேசி உங்களுக்கு டீ கொடுக்க முடியாது.இங்கே டீ குடிக்க வரக்கூடாது என கூறி அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது.
அதற்கு குப்பன் ஏன்? எங்களுக்கு டீ தர மாட்டீர்கள் என கேட்டதற்கு ஆத்திரமடைந்த அண்ணாதுரை குப்பனை அங்கிருந்த பிளாஸ்டிக் சேரால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த குப்பன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாதுரை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.