முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்ச்சி பெரம்பூரில் உள்ள பின்னி மில்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஆகஸ்ட் 7ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் யார் ஆட்சி அமைக்கப்படக்கூடாது என்பதற்கான தேர்தல் என்றும், வரும் 23ஆம் தேதி இதற்காக பீகாரில் எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தொலைபேசியில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும் தேவையற்ற வேறுபாடுகளை களைந்து எதிர்கட்சிகள் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, ஆளுநர் நிகழ்த்தக்கூடிய சித்து விளையாட்டுகளை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பொறுத்தது போதும் பொங்கி எழு என்கிற இடத்திற்கு வந்துள்ளதாகவும், திராவிடத்தை பார்த்து சிலர் பயப்பட்டு கண்ணை மூடிக்கொண்டு திராவிடத்தை எதிர்ப்பதாகவும், எங்கும் நிறைந்திருந்து கருணாநிதி கண்காணிப்பதாக கருதியே அரசு திட்டங்கள் தீட்டப்படுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், பெரியார், அண்ணா, கலைஞர்தான் எங்களது வழிகாட்டி என தெரிவித்தார்.ஓராண்டு தொடர்ந்து கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது என தெரிவித்தார்.
திமுக 1949 ஆம் ஆண்டு வடசென்னை ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்டது. அதன் நினைவாகவே வடசென்னையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா நிகழ்வை நடத்துவதாக கூறினார். மேலும் திமுக ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி என்றும் உலகதலைவராக செயல்பட்டவர் கருணாநிதி என்ற புகழாரம் சூட்டிய முதலமைச்சர், திராவிட நிர்வாகியில் கோட்பாட்டை உருவாக்கியவர் கலைஞர் என்று குறிப்பிட்டார்.
அனைத்து தொழில்களும் சிறக்க வேண்டும்,அனைத்து மாவட்டங்களும் வளம் பெற வேண்டும்,மாநிலத்தின் வளம் என்பது மாநில மக்களின் சிந்தனை வளர்ச்சியால் தெரிய வேண்டும் இது தான் திராவிட மாடல் வளர்ச்சி என்றார்.2024 நாடாளுமன்ற தேர்தல் இந்திய ஜனநாயக அமைப்பு முறையை காப்பாற்றுவதற்காக இந்தியா முழுவதும் இருக்ககூடிய பாஜக விற்க்கு எதிரான ஜனநாயக சக்திகளை வேறுபாடுகளை களைந்து ஒன்று சேர்ந்தாக வேண்டும்.என்றார்.