ஒடிசா அருகே பாலசோர் பகுதியில் நடந்த கோர ரயில் விபத்தில் சுமார் 260க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கான மீட்புப் பணிகள் நிறைவுற்று சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கோரமண்டல் ரயில் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிய விபத்து இந்தியாவையே உலுக்கியது.
பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா ரயில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்து பிரதமர் ஆய்வு செய்தார். அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டு குழுவும் ஒடிசாவுக்கு சென்று மீட்புப் பணிகளை செய்தனர்.

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்க்கு தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என 4 பேர் கொண்ட முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.கோரமண்டல் எக்ஸ்பிரஸ்க்கு பச்சை சிக்னல் கொடுத்து உடனடியாக ரத்து செய்யப்பட்டதால் மெயின் லைனுக்கு செல்ல வேண்டிய ரயில், லூப் லைனுக்கு சென்று சரக்கு ரயிலில் மோதியுள்ளது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ்-ன் பெட்டிகள் தடம் புரண்டு மெயின் லைனில் விழுந்ததால், அந்த வழியே வந்த யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ்-ம் விபத்தில் சிக்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஏ.சி.பெட்டிகள் அதிகளவில் தடம் புரண்டுள்ளது. பெட்டிகள் கவிழ்ந்த வேகத்தில் ஜன்னல் வழியே பயணிகள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். பின்பு பயணிகள் மீது பெட்டிகள் விழுந்ததால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களுக்கு இடையே அமைக்கப்படும் ‘கவாச்’ என்னும் பாதுகாப்பு அம்சம் அமைக்கப்படவில்லை. ரயில்களின் வருகை உள்ளிட்ட தகவல்களை முன்கூட்டியே தரும் ‘கவாச்’ என்னும் தொழில்நுட்பம் இல்லை என்று ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் மோதல் மற்றும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் ‘கவாச்’ எனும் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு ரயில்வே துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.