ஒதிஷா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தினை அடுத்து, தமிழக பாஜக சார்பாக உதவி மேற்கொண்டு வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,”ஒதிஷா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தினை அடுத்து, தமிழக பாஜக சார்பாக, K. ரவிச்சந்திரன், திரு. ஜெயக்குமார் மற்றும் A.N.S. பிரசாத் ஆகிய மூவர் கொண்ட குழு நேற்று சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தது.
பாலசோர் மருத்துவமனையில், காயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்க உதவிக் கொண்டிருக்கிறார்கள்.
விபத்தில் மரணமடைந்தவர்களிலும், காயமடைந்தவர்களிலும், தமிழகத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி நிறைவு பெறும் வரை, தமிழக பாஜக குழு அங்குத் தங்கி இருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைக்க உதவுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.